தூத்துக்குடி: மண்டல பூஜையில் மைக் பிடித்து பக்திப் பாடலை பாடிய ஐயப்ப பக்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். எதிர்பாராத விதமாக நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் வெங்கடேசன். இவர், ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
சபரிமலை கோவிலுக்குச் செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தவர், ஆழ்வார்திருநகரியில் உள்ள கருணாகர விநாயகர் கோவிலில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐயப்ப சுவாமியின் மண்டல பூஜை விழாவில் மைக் பிடித்து பக்திப் பாடலை பாடினார்.
அப்போது மைக் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை சக பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருகிறது.

