சென்னை: மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.
“ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும்போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.
“தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.
“ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது மத்திய அரசுக்கு கரிசனம் வருமா?
“ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் மத்திய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன,” என்று விஜய் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் நாடக அரசியலைப் பார்த்துப் பார்த்து நன்கு பழக்கமாகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. தேர்தல் வரும் வரை காத்திருக்காமல் இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்,” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.