சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான விழாவைக் கொண்டாட அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல், தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ஓய்வில் இருக்கிறார். இதனால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) மாலை திட்டமிடப்பட்டிருந்த விழா தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விழா மீண்டும் நடைபெறும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
