தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியர் ரமணியின் உடலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த நாள் வேதனைக்குரிய நாளாக அமைந்து விட்டது. ஆசிரியையின் சொந்த பிரச்சினையாக இருந்தாலும் பள்ளிக்குள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
“இதுபோன்று காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்பவர்களுக்காக வழக்கறிஞர்கள் யாரும் வாதாட வரக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக வேண்டுகோள் விடுக்கிறேன்.
“இவர்களைப் போன்றவர்கள் கண்டிப்பாக தண்டனைக்குரியவர்கள். இவருக்குக் கொடுக்கப்படும் தண்டனையானது ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
“மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு இருக்கும். எனவே, பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
“பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

