தூத்துக்குடி: அண்மையில் தமிழக மீனவர்கள் 12 பேரையும் அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறைபிடித்த மாலத்தீவு, அவர்களுக்கு ரூ.2.27 கோடி அபராதம் விதித்திருப்பதால் மீனவர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜெயபாலன். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 12 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அக்டோபர் 22ஆம் தேதி மாலத்தீவு எல்லை அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த மாலத்தீவுக் கடலோரக் காவல்படையினர், தவறுதலாக மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் கைது செய்தது. அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
பின்னர் அவர்கள் மாலத்தீவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து, மீனவர்களையும் விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, மாலத்தீவு அரசு, விசைப்படகு உரிமையாளர் அந்தோணி ஜெயபாலனுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
அதன்படி மாலத்தீவு சென்ற ஜெயபாலன், மாலத்தீவு கடல் பகுதியில் இருப்பதை உணர்ந்தவுடன் படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக வெளியேறுவதற்கு முயன்றனர் என்றும் ஆனால், கடல் நீரோட்டம் காரணமாக படகு மீண்டும் மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்தது என்றும் விளக்கமளித்தார். படகின் உந்துவிசிறியில் வலை சிக்கிவிட்டதால் அதை அவிழ்க்க 5 மணி நேரம் ஆனதாகவும் தற்செயலாக வலையில் 40 சுறாமீன்கள் சிக்கிவிட்டதாகவும் அவர் சொன்னார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த மாலத்தீவு அதிகாரிகள், மோசமான வானிலைக்கான சான்று இல்லை என்றும் விசைப்படகு அனுமதியின்றி மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்தது என்றும் குற்றஞ்சாட்டினர்.
விசாரணையைத் தொடர்ந்து, அனுமதியின்றி மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததற்காக 30 நாள்களுக்குள் 4.20 மில்லியன் ருஃபியா (ரூ.2.27 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபாலன், “நாங்கள் இப்போது ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் கைகொடுத்து விசைப்படகையும் மீனவர்களையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதிசெய்யும் என்று நம்புகிறோம்,” என்று சொன்னார்.
இதன் தொடர்பில் ஓரிரு நாள்களில் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்த தருவைக்குளம் பொதுமக்கள் முடிவுசெய்துள்ளனர்.