சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
கூட்டணியில் இருந்து விலகும் முடிவையடுத்து, அண்மைய தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவ்விருவரும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் ஏற்கெனவே திமுகவில் இணைந்து விட்டநிலையில், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பொதுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும் மதிமுகவிலேயே நீடிப்பதாக தம்மிடம் உறுதி அளித்திருப்பதாக வைகோ தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் தமக்கும் மதிமுகவுக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட வைகோ, தவெக தலைவர் விஜய்யுடன் தான் நடத்திய சந்திப்பு 80 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், தவெக ஆட்சியில் ஊழல் அழிக்கப்பட்டுள்ளது என்றும் சமூக நீதி, இரு மொழி கொள்கைகளில் தவெக தலைமை உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.
எதிர்வரும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், தொகுதி மக்கள் நாள்தோறும் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்து பதவி விலகப் போவதில்லை என்றும் இது தொடர்பாக வைகோ பிறப்பித்த உத்தரவை தம்மால் செயல்படுத்த இயலாது என்றும் கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
“மதிமுக அலுவலகமான தாயகத்தில் ஜூன் 26ஆம் தேதி வைகோவை சந்தித்துப் பேசினேன். பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தேன்.
“சட்டப்பேரவையில் எனது செயல்பாடுகள் தகுதி நீக்கத்துக்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம் என்றும், இப்போது அவசரம் வேண்டாம் என்றும் குறைந்தபட்சம் 6 மாதம் பொறுத்திருப்போம் என்றும் கூறினேன். கூட்டணி குறித்து எடுக்கும் முடிவை மதிப்பதாகவும் இன்னும் சில பல செய்திகளையும் வைகோவிடம் கூறி கண்ணீருடன் முறையிட்டேன்,” என்றும் தமது சமூக ஊடகப் பதிவில் ராஜேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

