சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் முன்பு மக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு கைப்பேசி செயலியை அறிமுகம் செய்ய அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையாக இருக்கும் என்று கூறினார்.
திமுக குழு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்க உள்ளது. அதன் பிறகே தேர்தல் அறிக்கை வெளியாகும்.
எனினும், தேர்தல் நடத்துவதற்குள், குறுகிய கால அவகாசத்தில் பரவலாக கருத்துகளைப் பெறுவது சாத்தியமல்ல என திமுக மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.
இதையடுத்து மக்களை எளிதில் அணுகவும் தேர்தல் அறிக்கை தொடர்பான அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறியவும் அக்கருத்துகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும் வகையில் கைப்பேசி செயலி ஒன்றை திமுக தலைமை அறிமுகம் செய்கிறது.
இதனிடையே, அதிமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகிறது. இந்த முறை தேர்தல் களத்தில் உள்ள கட்சிகள் தமிழக மக்களுக்கு எத்தகைய வாக்குறுதிகளை அளிக்க உள்ளன எனும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, இலவசத் திட்டங்கள் ஏதேனும் அறிவிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

