தர்மபுரி: சுற்றுக்காவல் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில், அப்பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் குற்றச்செயல்களையும் விபத்துகளையும் தடுக்கச் சுற்றுக்காவல் தீவிரப்படுத்தப்படுகிறது.
இதற்காக, காவல்துறையினருக்கு ‘மொபைல் டேட்டா டெர்மினல்’ என்ற கருவி பொருத்தப்பட்ட, நவீன தொழில்நுட்பம் கொண்ட இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தோள்பட்டையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் இதன்மூலம் பல குற்றச்செயல்களைத் தடுக்க இயலும் என்றும் தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“நவீன வாகனங்களில் 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவார்கள். அதிகம் கூடும் இடங்களில் இந்தப் பணி தீவிரப்படுத்தப்படும்,” என்றார் அவர்.

