நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் புஷ்பவனம் மீனவக் கிராமத்தில், திங்கட்கிழமை (டிசம்பர் 9) காலை 8 மணியளவில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த மூங்கிலால் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று கரை ஒதுங்கியது.
இந்த மூங்கில் படகு 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரத்துடன் சுமார் 150 மூங்கில்களால் கட்டப்பட்டுள்ளது. மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றார்போல் 6 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்ட ஓலையால் ஆன கூரை ஒன்றும் உள்ளது.
இந்தப் படகில் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்த சுமார் 30 கிலோ கோழித் தீவனமும் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவற்படையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேதாரண்யம் கடலோரக் காவற்படையின் ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான காவல்துறையினர் படகைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து, அந்தப் படகில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் வந்தார்களா அல்லது புயலால் அது கரை தட்டியதா என விசாரித்து வருகின்றனர்.