சென்னை: பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சுப்பிரமணியன், “டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்ஸ் போல், தமிழகத்தில் 708 நகர்ப்புற நல்வாழ்வு நிலையங்களை அமைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், 21 மாநகராட்சிகளிலும் 63 நகராட்சிகளிலும் ரூ.177 கோடி செலவில் மருத்துவமனைகள் அமையவுள்ளன என்றார்.
இந்த அரசு அமையும் முன்பு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் எண்ணிக்கை 18 மட்டும்தான். ஆனால், இப்போது 19 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பணிகள் ரூ.1,018 கோடி செலவில் 5 இடங்களில் நடைபெறுகின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் அதிகமான மருத்துவமனைகள் புதிதாக வந்துள்ளன என்று கூறினார்.