சென்னை: நீலகிரி மரநாய், அரியவகை விலங்குகள் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் உள்ள நீலகிரி மரநாய் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகிறது.
நீலகிரி மார்ட்டின் என்றும் குறிப்பிடப்படும் இந்த வகை நாய்களை வனப்பகுதிகளில் மட்டுமே வெகுவாகக் காண முடியும். பார்ப்பதற்கு கீரிப்பிள்ளை போன்று தோற்றம் அளித்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன. கறுப்பு நிறத்தில் காணப்படும் நீலகிரி மரநாய்களை, மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் காண்பது மிக அரிது.
தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் முள்ளெலி போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ் நீலகிரி மரநாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், தமிழகத்தில் தற்போது எந்தெந்த பகுதிகளில் எத்தனை மரநாய்கள் உள்ளன என்ற விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

