தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீலகிரி: ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்; அதிர்ச்சியில் மக்கள்

2 mins read
629cd6aa-b0bb-4b20-aee0-dcae7afb9f67
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் தொகுதியைச் சேர்ந்த கோடேரி சிற்றூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். - கோப்புப்படம்: ஊடகம்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதியைச் சேர்ந்த கோடேரி என்னும் சிற்றூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குன்னூர் வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோடேரி சிற்றூருக்கான இறுதி வாக்காளர் பட்டியலை 12வது வார்டு உறுப்பினர் மனோகரன் ஆய்வு செய்தார். அப்போது அந்தப் பட்டியலில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதில், குறிப்​பிட்ட வாக்​குச் சாவடிக்கு உட்​பட்டு 12, 17 ஆம் எண் வார்​டு​கள் மட்​டுமே உள்ள நிலை​யில், 11, 12, 17 வார்​டு​கள் உள்​ள​தாகக் குறிப்​பிட்​டுள்​ளதுடன், 9, 10 வார்​டு​களின் வாக்​காளர்​களும் இதில் இடம் பெற்​றுள்​ள​தாகத் தெரியவந்​துள்ளது.

மேலும், நான்கு வீடுகளைக் கொண்ட வாடகைக் குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டிலும் 9 பேர், 10 பேர், 33 பேர், 79 பேர் என்று பதிவிடப்பட்டிருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர் பெயர்கள் பல வீடுகளின் எண்களில் குடியிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்னர், அந்தக் குடியிருப்பில் இருந்து வெளியேறி வெளியூர்களுக்குச் சென்றவர்களின் பெயர்களும் அந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வார்டு உறுப்பினர் மனோகரன் கூறும்போது, “இது போன்ற வாக்​காளர் பட்​டியலை வைத்துக் கொண்​டு, அரசி​யல் கட்​சி​யினர் குறை சொல்​வது வேடிக்​கை​யாக உள்​ளது.

818 வாக்​காளர்​கள் உள்ள இந்த வாக்​குச் சாவடி​யில் வாக்​காளர் பட்​டியலில் வார்டு வரையறை கூடச் சரிவரச் செய்​யாமல் குளறு​படிகள் உள்ளன. இதைத் தேர்தல் அலுவலர்களின் அலட்சியம் என்பதா அல்லது தரவுகளைப் பதிவேற்றியவர்களின் கவனக்குறைவு என்பதா. இந்தத் தவறுகள் சரிசெய்யப்பட்டு சரியான தரவுகள் பதிவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன், இதை வலியுறுத்தித் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் சொன்னார்.

இந்தப் புகாரை அடுத்து குன்​னூர் வட்​டாட்​சி​யர் ஜவகர் தலை​மை​யில் அதி​காரி​கள் கோடேரி சிற்றூரில் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்​னூர் வட்​டாட்​சி​யர் ஜவகர் கூறும்போது, “இங்குள்ள வாக்​காளர் பதிவேடு குறித்து ஆய்வு செய்​து, அதில் உள்ள குழப்​பங்​களைத் தீர்க்​கும் வகை​யில், நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது,” என்​றார்.

குறிப்புச் சொற்கள்