சென்னை: தமிழக அரசின் இருமொழிக் கொள்கை திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்தில் இந்திய அரசின் மறைமுக அழுத்தத்துக்கு தவெக தலைமையிலான அரசு நிச்சயமாக அடிபணியாது என்றும் தவெகவின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கைதான் என்றும் அவர் செவ்வாய்க்கிழமை (மே 19) செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி இந்திய அரசிடம் இருந்து வந்து சேரவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அந்த நிதி மாணவர்களுக்கானது என்பதை மறந்துவிடக்கூடாது என்றார். எனவே, எந்தக் காரணத்துக்காகவும் நிதி நிறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.
கல்விக் கொள்கையில் தவெக அரசாங்கம் எந்தவிதமான மறைமுக அழுத்தத்துக்கும் அடிபணியாது என அவர் தெளிவுபடுத்தினார்.
“கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. இருமொழிக் கொள்கை என்பது தவெக கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது,” என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.
பாஜக தலைமையிலான இந்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ என்ற பள்ளித் திட்டம் இடம்பெற்றுள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தனது இலக்கு என மத்திய அரசு கூறியது.
ஆனால், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் திமுக தலைமையிலான முந்தைய தமிழக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலமாக தமிழகத்துக்கு தரவேண்டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இது அநீதி என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின்கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்திய அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

