அரியலூர்: அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் பங்கேற்க முடியாமல் போனதற்காக, தாம் வருந்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல்திட்டத்தோடு ஒருதரப்பினர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்,” என்றும் திருமாவளவன் மேலும் கூறியுள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் திருமாவளவனும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்கவில்லை.
நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப் பூதாகரப்படுத்திய தமிழக நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“’திராவிட முன்மாதிரி அரசு’ என்பதைக் கடுமையாக விமர்சித்த விஜய்யுடன், திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள்’ என திமுக தொண்டர்களுக்குச் செய்தி சொல்வதும் அதன் அடிப்படையில் என் மீதான அரசியல் நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கமென்பது வெளிப்படுகிறது,” என திருமாவளவன் மேலும் கூறியுள்ளார்.