சென்னை: தனது குடும்பத்தையும் நட்பையும் கைவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இனி முழுநேர அரசியலில் இறங்குவது குறித்து நன்கு ஆலோசித்து முடிவெடுத்த பிறகே களமிறங்கியதாக தவெக வேட்பாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், தவெக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் எனும் போரில் தவெகவின் முன்கள வீரர்கள் வேட்பாளர்கள்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
குடும்ப வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
“இனி எனக்கு எல்லாமே அரசியல்தான். இந்த முடிவுடன்தான் குடும்பம், நட்பு என எல்லாவற்றையும் கைவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்துள்ளேன்,” என்றார் விஜய்.
முன்னதாக, நேர்காணலில் பங்கேற்று வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் தொகுதிப் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மேலும், இனிவரும் ஒவ்வொரு நாளையும் தேர்தல் நாளாகக் கருதி களப்பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) 60 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை விஜய் இறுதி செய்திருப்பதாகவும் வரும் 18ஆம் தேதிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து இறுதிப்பட்டியலை வெளியிட அவர் தயாராகிவிட்டதாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

