சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக முழு வீச்சில் தயாராகி வருவதாக அதன் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு பார்வையாளரை நியமித்துள்ளது திமுக தலைமை.
மொத்தம் 234 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுகவில் ஏற்கெனவே ஐந்து பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளித்துள்ள ஆலோசனையின் பேரில் தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி குழு அமைத்தல், வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட தேர்தல் பணிகளைத் தற்போது நியமிக்கப்பட்ட தொகுதிப் பார்வை யாளர்கள் மேற்பார்வையிட உள்ளனர்.

