சென்னை: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நடைபெறும் இடம், நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
தூய்மையான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை, இணையவழி மனை பிரிவு, கட்டட அனுமதி, சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.