சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பலர் பணி விடுப்பு எடுத்துக்கொண்டு, விமானம் மூலம் நாடு திரும்புவதாக வெளிவரும் செய்திகள் தேர்தல் ஆணையத்துக்கு வியப்பை அளித்துள்ளன.
வேலைக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகவும் தனித்தனியாகவும் விமானம் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருப்பதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
நாள்தோறும் பல்வேறு விமானச் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு ஏறக்குறைய 8,500 பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக இவ்வாறு சென்னைவரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இவர்களில் பலர் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வத்துடன் விடுப்பு எடுத்துக்கொண்டு தாயகம் திரும்புவது தெரியவந்துள்ளது.
இம்முறை தமிழகத்தில் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், வெளிநாடுவாழ் தமிழர்களின் வருகை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
இதற்கிடையே, அண்டை மாநிலமான கேரளாவில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான தமிழக ஊழியர்களுக்கு அங்குள்ள தனியார் நிறுவனங்கள் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளித்துள்ளது.

