பழனிசாமி, தினகரன் இணைந்து மேற்கொண்ட பிரசாரம்

பழனிசாமி, தினகரன் இணைந்து மேற்கொண்ட பிரசாரம்

1 mins read
dcbebb3b-1d58-4fb5-b17e-f7681eb3bd63
தங்களுக்குள் இருப்பது அண்ணன், தம்பி சண்டைதான் என்று கூறினார் தினகரன். - படம்: தினமணி

தஞ்சாவூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஒரே வாகனத்தில் இணைந்து நின்றபடி பிரசாரம் மேற்கொண்டனர்.

இவ்வாறு இருவரும் இணைந்து பிரசாரம் செய்வதைக் கண்டு சிலர் அச்சத்தின் உச்சத்தில் இருப்பதாக தினகரன் தெரிவித்தார்.

மேலும், தங்களுக்குள் இருப்பது அண்ணன், தம்பி சண்டைதான் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படுவது இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மற்ற தரப்பினர் இந்தப் புதிய உறவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் அமமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருந்தன. இரு கட்சியினரும் எதிர்த்தரப்பினரைக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக இவ்விரு கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளன.

தொகுதிப் பங்கீடு முடிவான வேளையில் பழனிசாமி, தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் காட்சியளித்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூரில் பழனிசாமியும் தினகரனும் ஒரே வாரத்தில் ஒன்றாக இணைந்து மேற்கொண்ட பிரசாரம் தொண்டர்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளித்துள்ளது.

“நாங்கள் அண்ணன், தம்பி போன்று சண்டை போட்டது உண்மைதான். ஏதோ ஒரு பிரச்சினைக்காக சண்டைபோட்டோம். இப்போது எல்லாரும் இணைந்துள்ளோம்.

“சென்னை முதல் குமரி வரை நம் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்துவிட்டார்கள். நாங்கள் திமுக என்கிற தீய சக்தியை ஆட்சியில் இருந்து விரட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து வந்திருக்கிறோம்,” என்றார் தினகரன்.

குறிப்புச் சொற்கள்