15 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு மாறினார் பழனிசாமி

15 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு மாறினார் பழனிசாமி

1 mins read
cb58842f-93e0-4ecb-9434-b412ba539089
அதிமுக தலைமையகம் உள்ள ராயப்பேட்டையில் புதிய இல்லத்தில் எடப்பாடி கே.பழனிசாமி குடியேறியுள்ளார். - படம்: பாலிமர் நியூஸ்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் அதிமுக தலைமையகம் உள்ள ராயப்பேட்டையில் புதிய இல்லத்தில் குடியேறியுள்ளார். 2011 முதல் 15 ஆண்டுகளாக சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ‘செவ்வந்தி’ என்ற அரசு இல்லத்தில் அவர் வசித்து வந்தார்.

தமிழ்நாடு அமைச்சராக, முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் அந்த அரசு பங்களாவில் அவர் வசித்து வந்தார். அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, திரு பழனிசாமி தமது எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை இழந்ததால் பசுமைவழிச் சாலை அரசு இல்லத்தைக் காலி செய்தார்.

தெய்வசிகாமணி தெருவில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை (மே 29) புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தி, பால் காய்ச்சி முறைப்படி திரு பழனிசாமி குடிபுகுந்தார்.

அரசியல் பணிகளுக்காக சென்னையில் வசித்தாலும், திரு பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் ஆகும். அங்கு அவருக்குச் சொந்தமான விவசாய நிலமும் பாரம்பரிய இல்லமும் உள்ளது.

குறிப்புச் சொற்கள்