சென்னை: சென்னையில் உள்ள மேம்பாலங்களின் கீழே உள்ள பகுதியில் பூங்காக்களும் கார் நிறுத்தும் இடங்களும் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகரில் ஏராளமான மேம்பாலங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவினாலும், மேம்பாலங்களின் கீழே காலியாக உள்ள இடங்கள் சரியாகப் பராமரிக்கப்படாமல் குப்பைக்கிடங்குகளாக மாறிவிட்டன.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
சென்னை கலைவாணர் மேம்பாலத்தின் கீழே நடைபாதையுடன் கூடிய சிறுவர் விளையாட்டுப் பகுதி உருவாக்கப்பட உள்ளது.
அதேபோல் மேம்பாலங்களில் கீழுள்ள பகுதியில் மின்னூட்டி மையங்களும் பொதுக்கழிப்பறைகளும் கட்டப்படும் சில இடங்களில் அலங்கார விளக்கு வசதியுடன் கூடிய இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வோர் இடத்திலும் வெவ்வெறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் இந்தப் பணிகள் முடிவடைய உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

