கூடலூர்: கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கேரள அரசு அணை பலவீனம் அடைந்துவிட்டதாகக் கூறி, புது அணை கட்டவேண்டும் என தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.
தற்போது முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமித்து பல்வேறு பணிகளைத் தொடங்கி உள்ளனர். ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்தம் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்க முடியாத அளவுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றது.
மேலும் தமிழக அதிகாரிகள் அணை பராமரிப்புக்கு செல்ல விடாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர்.
எனவே, முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதிகளை விட்டு கேரள அரசு வெளியேற வேண்டும் என கோரி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள மாநில எல்லையான லோயர் கேம்ப்பில் பெரியாறு-வைகை பாசன விவசாயச் சங்கத்தினர் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.