சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஏறக்குறைய 40,000 ஏரிகள், குளங்களில் விவசாயிகளும் பொதுமக்களும் இலவசமாக வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், அரசு மேற்கொள்ளும் இந்நடவடிக்கையால் நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, ஏறக்குறைய 40,000 ஏரிகளும் குளங்களும் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அடுத்து வடகிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கித் தீவிரமடைவதற்குள் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை அகற்ற அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு ஏதுவாகப் பருவமழைக் காலம் தொடங்கும் முன்பே அந்நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தனி நபர்களின் வீட்டுப் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின்போது அம்முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்த, ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியலை, மாவட்ட அளவிலான அரசிதழில் வெளியிட, ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடைமுறையில் உள்ள விதிகள், வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த வாய்ப்பை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்புடைய அலுவலர்களின் மேற்பார்வையில், மண்ணை இலவசமாக, உரிமக் கட்டணம் செலுத்தாமல் எடுத்துச் செல்லலாம்,” என அரசு வெளியிட்ட அறிக்கை மேலும் தெரிவித்தது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களின்போது மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மூழ்குவை வழக்கமாகிவிட்டது. இம்முறை அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என முதல்வர் விஜய் அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

