சென்னை: சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு காவல்துறை அதிகாரிகள் சென்றதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர் காவல்துறையினர் அவர் வீட்டில் யாரும் இல்லாததால் திரும்பிச்சென்றனர்.
ஊழல் புகார்களுக்கு ஆளான செந்தில் பாலாஜிமீது அரசு போக்குவரத்துக் கழகத்துக்கான ஆட்சேர்ப்பில் லஞ்சம் பெற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.
இது மட்டுமின்றி, மின்சார வாரிய ‘மின்மாற்றி’ கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்குச் சனிக்கிழமை (ஜூன் 20) கரூர் காவல்துறையினர் சென்றனர்.
எந்த வழக்கிற்காக விசாரணை நடத்தச் சென்றனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இவரது சகோதரர் அசோக்கை காவல்துறை தேடுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் இந்த ஊழல் வழக்குகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு காவல்துறை ஆர்வம் காட்டவில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி பெயரளவுக்கு மட்டும் விசாரணை நடந்தது. இப்போது, ஆட்சி மாறிய நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

