சென்னை: தமிழகம் முழுவதும் 53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் முதல்வர் விஜய் சில குழந்தைகளுக்குத் தன் கையால் சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுக்கு அவர் பொம்மைகளைப் பரிசளித்தார்.
இந்தியாவில் போலியோ (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பு நடவடிக்கையாக ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன.
காலை முதல் மாலை வரை இந்த முகாம்களுக்கு ஏராளமான பெண்கள், கைக்குழந்தைகளுடன் வருகை தந்தனர்.
இந்த ஆண்டு ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 53 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.


