பொற்பனைக்கோட்டை அகழாய்வு: பழந்தமிழர் மணிகள் செய்த தொழிற்கூடம் இருந்ததற்கான சான்று

பொற்பனைக்கோட்டை அகழாய்வு: பழந்தமிழர் மணிகள் செய்த தொழிற்கூடம் இருந்ததற்கான சான்று

2 mins read
7fcdccb9-ca62-4fa7-a21f-763aece46880
அகழாய்வின்போது செம்பினால் ஆன ஆணிகள், முக்கோண வடிவிலான தேய்ப்புக்கல் ஆகியவை கிடைத்தன. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவுக்கு வந்தன. திட்டமிட்டபடி மாதிரிகளைச் சேகரிக்கும் முக்கியப் பணி நிறைவடைந்ததாக தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இடங்களில் புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையும் ஒன்று.

பொற்பனைக்கோட்டையானது 44.88 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டைக்குள் 3.11 ஏக்கர் பரப்பளவிலும் வாழிடப்பகுதியாகவும் உள்ளது. இங்கு கடந்த 2021ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தின் திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழாய்வில் 22 குழிகள் தோண்டப்பட்டன.

அப்போது, ஐநூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பானை ஓடுகள், கீறல் குறியீடுகள் செங்கல் கட்டுமானங்கள், தங்க மூக்குத்தி, தோடு, சூது பவள மணிகள், தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்பு, மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரௌலட் வகை பானை ஓட்டில் வட்டச்சில், ரோம நாட்டு எண் ஜாடி பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பெருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இரண்டாம்கட்ட அகழாய்வு தொடங்கியது. இம்முறை செம்பினால் ஆன ஆணிகள், முக்கோண வடிவிலான தேய்ப்புக்கல் ஆகியவை கிடைத்தன.

மிக முக்கியமாக, இங்கு முழுமை பெற்றும் பெறாமலும் கிடைத்துள்ள மணிகள்தான் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஏனெனில் இவை, பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குவதாக தொல்லியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும், பச்சைக் கல் மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட மணி மற்றும் சூது பவள மணி, சிவப்பு நிற பானை ஒடுகள், கறுப்பு நிற பானை ஒடுகள், கறுப்பு, சிவப்பு நிற பானை ஒடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்