சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னையில் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் பெரிய அளவிலான பாதிப்புகளில் இருந்து சென்னையைக் காப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடையாற்றைச் சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
“சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகியவை உள்ளன. மாநகரின் ஒட்டுமொத்த நீர் ஆதாரத்துக்கு 13,222 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைத்துக்கொள்ள இந்த ஏரிகள் பயன்படுகின்றன.
ஆறு, ஏரிகளிலும் தற்போது 10,028 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது,” என்றார் திரு மா.சுப்பிரமணியன்.
அடையாற்றில் முன்பு 25,000 கன அடி நீர் மட்டுமே தாங்கும் என்றும் அதற்கு மேல் நீர் வந்தால் அடையாற்றோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
“அடையாற்றைச் சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடி செலவில் மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
“அடையாற்றில் இருந்து சைதாப்பேட்டை வரை அடையாற்றின் இரு வழிகளிலும் கரைகள் எழுப்பி பலப்படுத்தி சுற்றுலா மையமாக மாற்றப்பட உள்ளது,” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

