கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) மாலை நடந்த பிரம்மாண்டமான பரப்புரைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் தோன்றி, ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
அப்போது பேசிய ராகுல், “இளையர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியைக் கொண்டு வந்ததால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.
“கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 83 விழுக்காடு இளையர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாத பிரதமர் மோடி, 20 முதல் 25 பெரும் பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளார்.
“மத்திய அரசில் 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அவை அனைத்தையும் உடனடியாக நிரப்புவோம். வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக இளையர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
“தமிழக மாணவர்களின் மிகப்பெரிய பிரச்சினையாக நீட் நுழைவுத்தேர்வு உள்ளது. இண்டியா கூட்டணியைப் பொறுத்தவரை, நீட் தேர்வு மாநில அரசின் முடிவுப்படியே செயல்படுத்தப்படும். தமிழக மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.
“இது கருத்தியலுக்கான போர்; தமிழ் மக்களின் வரலாறு, பண்பாடு, கலாசாரம், வாழ்வியலுக்கான போர். தமிழ் மக்களின் மொழி, கலாசாரம், வரலாற்றைக் காக்க நானும் காங்கிரஸ் கட்சியும் துணையாக நிற்கிறோம்.
“தமிழ் மொழி ஏதோ ஒரு மொழியன்று. தமிழ் மொழி மீதான தாக்குதல், தமிழர்கள் மீதான தாக்குதல். தமிழ், வங்காளம், இந்திய மக்கள் பேசும் மற்ற மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது. இது எல்லா இந்திய மொழிகளையும் பாதுகாப்பதற்கான போர்.
“தமிழகத்திற்கு வந்து, தனக்குத் தோசை பிடிக்கும் எனக் கூறும் பிரதமர் மோடி, டெல்லிக்குச் சென்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே மொழி என்று பேசுகிறார். மற்ற மொழிகளை அங்கீகரிக்கக்கூடாது என்பதற்கு இவர்கள் யார்?,” என்று பேசினார்.
உண்மையில் இது அதானியின் அரசு என்றும் பிரதமர் மோடி அனைத்தையும் அதானிக்காகவே செய்துகொண்டிருக்கிறார் என்றும் அவர் சாடினார்.