மதுரை: இந்திய குடிமைப் பணி (யுபிஎஸ்சி) உட்பட பல்வேறு உயர் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி ராஜேஸ்வரி, இந்திய அளவில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த முருகதாஸ், உள்ளூரில் மின்பொருள் விற்கும் கடை வைத்துள்ளார். இவரது மகள் ராஜேஸ்வரி படிப்பில் கெட்டிக்காரர். தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய ‘குரூப்-1’ தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற இவர், துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அதிகாரியாக பணிபுரிந்துகொண்டே 2025ல் நடந்த குடிமைப் பணிக்கான தேர்வை எழுதினார். இதில் நாடு முழுவதும் 958 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ராஜேஸ்வரிக்கு இந்திய அளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் பயிற்சி அதிகாரியாக உள்ள இவர், தனக்கு தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் சாதிக்க உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கெல்லாம் காரணம் எனது பெற்றோர்தான். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் சாதித்திருக்கிறேன்.
“தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் தேர்வுக்கான பயிற்சியைப் பெற பத்து மாதங்களுக்குத் தமிழக அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி என்னை ஊக்கப்படுத்தியது,” என்று ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

