சென்னை: தவெக கட்சியினர் அனைவரும் தங்கள் பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் தன்னைப் பற்றியும் பேச வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, தமக்கு ‘காமராஜர்’, ‘இளைய காமராஜர்’ எனப் பட்டம் சூட்டிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தாங்கள் படித்த பள்ளி, ஆசிரியர்கள் குறித்து வேண்டுமானால் பேசலாம் என்றும் விஜய் கூறினார்.
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்தல்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு விருது அளிக்கும் விழாவில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவியரின் தோள்மீது கைபோட்டு வாழ்த்துவதாகவும் மாணவியர் விஜய்க்கு முத்தம் கொடுப்பது இழிவான செயல் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் பேசிய ஒரு மாணவி, விஜய்யை தாய் மாமனாகவும் அப்பாவாகவும் அண்ணனாகவும் உயிராகவும் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
“குஜராத்தில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது மிகப்பெரிய சோகம். அங்கு எடுக்கப்பட்ட காணொளிகள், புகைப்படங்களைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது,” என்று குறிப்பிட்ட விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் விமான விபத்தில் இறந்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.