சென்னை: தமிழகப் பத்திரப் பதிவுத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக்குழு, இதுவரை எந்தவோர் புகாரையும் விசாரிக்கவில்லை என்பது அம்பலமாகி உள்ளது.
அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக குற்றஞ்சாட்டியது.
அடுத்து திமுக ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு திரு மூர்த்தி அத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதிமுக ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று அவர் அறிவித்த நிலையில், 2021 ஆண்டிலேயே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர்பான அரசாணையும் வெளியானது.
எனினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2023ல் தான் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
சொத்துகளின் மதிப்பைக் குறைத்து பத்திரங்களைப் பதிவு செய்வது, மோசடிப் பத்திரங்களைக் கண்டுகொள்ளாதது உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதிகாரிகள் பல முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய போதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிமுக அல்லாத எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறையில் அதிக அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால், அந்தத் துறை சார்ந்த ஊழல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட புலனாய்வுக் குழு, அறவே செயல்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

