சென்னை: அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத்தொகை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் வெளியிடும் கவர்ச்சியான வாக்குறுதிகளைப் பல்வேறு தரப்பினரும் கூர்ந்து கவனிப்பர்.
எனவே, தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் அரசியல் கட்சிகளின் தலைமை எப்போதும் தீவிர கவனம் செலுத்துவது வழக்கம்.
ஏற்கெனவே இரு கட்டங்களாக அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார் இபிஎஸ். தற்போது மூன்றாம் கட்டமாக ஆறு வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குடும்பத்துக்கு ரூ.10,000 கருணைத்தொகை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை, 12ஆம் வகுப்பு வரை படித்து வேலைக்காக காத்திருக்கும் இளையர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று திரு பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பொங்கல் பரிசுத் தொகையுடன் இனி ஆண்டுதோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏழு நகரப்பகுதிகளில் நடைபாதை, சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக அரசின் வருவாயைப் பெருக்கி அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

