சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.108 கோடி நிதி முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்புத் தணிக்கைக் குழு மேற்கொண்ட தணிக்கை நடவடிக்கையின்போது இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது என்றும் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஏறக்குறைய ரூ.107.94 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 186 வட்டாரங்களில் இந்த நிதிக் கையாடல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளே நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களின் ரத்த உறவினர்கள் தங்களது சொந்த வங்கிக் கணக்குகளுக்கு சிறப்பு நிதியில் இருந்து பணத்தை முறைகேடாகத் திசைதிருப்பிப் பயனடைந்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ராதாகிருஷ்ணன் பெற்ற தணிக்கை அறிக்கையின் மூலம் இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 388 வட்டாரங்களிலும் முழுமையான ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இனிவரும் காலங்களில் முறைகேடுகளைத் தடுக்க தெளிவான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தணிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளது.


