இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 பற்றுச்சீட்டு: திமுக தேர்தல் வாக்குறுதி

இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 பற்றுச்சீட்டு: திமுக தேர்தல் வாக்குறுதி

2 mins read
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: ‘இல்லத்தரசி’ திட்டத்தில் ரூ.8,000 பற்றுச்சீட்டு
02b0c48a-c9cf-4896-a59d-0856986edc58
சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். உடன் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான பற்றுச்சீட்டு (கூப்பன்) வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது திமுக.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

‘இல்லத்தரசி’ புதிய திட்டம்

இந்தத் தேர்தல் அறிக்கையின் மிக முக்கிய அம்சமாக உலா வருகிறது அரசு அறிவித்துள்ள ‘இல்லத்தரசி’ திட்டம் .

தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படவுள்ள ரூ.8,000 மதிப்பிலான பற்றுச்சீட்டு மக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த பற்றுச்சீட்டைக் கொண்டு துணி துவைக்கும் இயந்திரம், குளிர் பதனப் பெட்டி, தொலைக்காட்சி, மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களைப் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.

அல்லது பழைய பொருள்களை மாற்றி புதிதாக வாங்கிக் கொள்ளவும் இந்த பற்றுச்சீட்டைக் குடும்பங்கள் பயன்படுத்தலாம்.

இதன் தொடர்பில் கருத்துரைத்தார் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருவாட்டி கனிமொழி.

கட்சியின் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராகவும் இருக்கும் அவர், ‘‘பெண்களின் வேலைச் சுமையை குறைக்கும்பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே இந்த வலி தெரியும்,’’ என்றார்.

மகளிர், முதியோருக்கான முக்கிய அறிவிப்புகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித்தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். முதியோருக்கான மாத ஓய்வூதியம் 2,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

கல்வி-மாணவர் நலன்

தற்போது 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள காலை உணவுத் திட்டம், இனி 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.

5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள இரத்த சுத்திகரிப்பு மையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்படும். 20 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது திமுக.

பொருளாதார இலக்கு, வேலைவாய்ப்பு

தமிழகத்தின் பொருளாதாரத்தை 120 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக சொன்னதைச் செய்யும், செய்வதைச் சொல்லும். கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமன்றி, அறிவிக்காத பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.

“தமிழகத்தின் வளர்ச்சி தொடர மக்கள் மீண்டும் திமுகவை ஆதரிப்பார்கள்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்