தூத்துக்குடி: தூத்துக்குடி முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய 300 கிலோகிராம் போதைப்பொருளைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், விரலி மஞ்சள் போன்ற பொருள்கள் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் காவல்துறை தீவிரக் கண்காணிப்புப் பணியை மேற்கொள்கிறது.
இந்நிலையில் முறப்பநாடு பகுதியிலுள்ள துரை என்பவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் அங்குச் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் மூன்று கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளும் 300 கிலோ எடையுள்ள ‘சாரஸ்’ என்ற போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த போதைப்பொருள்களின் மதிப்பு ரூ.50 கோடி எனக் கூறப்படுகிறது. இதுகுறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.