சென்னை: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் 64 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில், அக்கட்சியை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்த சசிகலா, தமிழகம் திரும்பியதும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார்.
அதற்கேற்ப, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை அவர் தொடங்கியுள்ளார். மேலும், பாமக நிறுவனர் ராமதாசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவைப் போலவே, பாமகவிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் அன்புமணி.
இந்நிலையில், சசிகலா, ராமதாஸ் கூட்டணியால் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், அதிமுகவுக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளைப் பிரிக்க முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, முதற்கட்டமாக 21 வேட்பாளர்களை அண்மையில் அறிவித்தார் சசிகலா.
இரண்டாம் கட்டமாக, அடுத்து 38 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், புதன்கிழமை (ஏப்ரல் 1) அவர் வெளியிட்ட பட்டியலில் ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆக மொத்தத்தில், சசிகலா கட்சி இதுவரை 64 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளது. சசிகலா தரப்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டணியில் உள்ள பாமக சார்பில் இதுவரை 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

