கோவை: திருச்சியில் நடிகர் விஜய்க்கு கூடிய கூட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ‘மக்கள் சந்திப்புப் பிரசார’ பயணத்தை சனிக்கிழமை திருச்சியில் நடத்தியது.
அதில் பல்லாயிரம் பேர் திரண்டனர். விஜய்க்குச் சேர்ந்த கூட்டத்தால் திருச்சி நகரமே திணறியதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
‘’இங்கே கூடியிருக்கும் கூட்டம் தானா சேர்ந்த கூட்டம்; அன்புக்கும் பாசத்துக்கும் மட்டுமே அடிமையாக இருக்கும் கூட்டம்,’’ என்று விஜய் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) கோவை விமான நிலையம் வந்த சீமான், “ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் விஜய்க்கு வந்த கூட்டத்தைவிட பல மடங்கு அதிகமான கூட்டம் வரும்,” என்றார்.
“இளையராஜாவை இசை இறைவனாகப் பார்க்கிறோம். சச்சினுக்கு விருது தரும்போது, இளையராஜாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுத்தால் எங்களுக்குப் பெருமை,” என்றும் சீமான் தெரிவித்தார்.
பின்னர் அவர், “இயற்கை வளங்கள் குறித்து நான் போதிக்கும்போது புரியாது. பாதிக்கும்போது புரியும். இலங்கை, வங்கதேசம், நேப்பாளத்தில் வந்த நிலை நமக்கு வராது என்று யாராவது உறுதி தர முடியுமா,” என்று வினவினார்.