சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101.
கடந்த சில நாள்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த அவர், புதன்கிழமை (பிப்ரவரி 25) பிற்பகல் காலமானார்.
அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) மாலை 4 மணிவரை வைக்கப்படும்.
பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது விருப்பப்படியே உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.
திரு நல்லகண்ணின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்,” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர். தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தோழர் நல்லகண்ணுவின் பொதுச் சேவையைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி சிறப்பு செய்துள்ளன. தமிழ்நாடு அரசு 2007ல் டாக்டர் அம்பேத்கர் விருதும், 2022ல் தகைசால் தமிழர் விருதும் வழங்கி சிறப்பித்துள்ளன. விருது தொகைகளை இயக்க வளர்ச்சிக்கும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் வழங்கிய பெருமைக்குரியவர்.
தொடர்புடைய செய்திகள்
திரு இரா. நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்து என்னும் கிராமத்தில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தார். தமிழ்மொழி மீது தளராத பற்றுக் கொண்டவர். புலவர் பட்டம் பயின்றவர்.
18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த அவர், நெல்லை சதி வழக்கில், 27 வயதில் கைது செய்யப்பட்ட அவர், கடுமையான தண்டனைக்குள்ளானர். அவர் விடுதலை செய்யப்பட்டபோது இந்தியாவும் விடுதலை பெற்றிருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் செயலாற்றியவர். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.
விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டு வாழ்நாளில் பெரும்பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்.
திரு நல்லக்கண்ணுவின் மனைவியார் திருமதி இரஞ்சிதம் அம்மையார் 2016ஆம் ஆண்டில் காலமானார். இவர்களுக்கு ந.காசிபாரதி (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) டாக்டர் ந.ஆண்டாள் (ஓய்வு) ஆகிய இரண்டு மகள்கள், மூன்று பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர். இவருடன் உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர்.


