சென்னை: சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 முதல் 10ஆம் தேதிவரை சென்னையில் ‘சிங்கா 60’ விழா பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. குறிப்பாக சிங்கப்பூர், தமிழ்நாடு இடையிலான உறவு தனித்துவம் மிக்கது. சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் விளங்குகிறது. இருநாடுகளுக்கும் இடையே பண்பாடு, பொருளியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் ஆழமாக உள்ள உறவையும் பிணைப்பையும் பிரதிபலிக்கும் வகையில் சிங்கா 60 விழாவை இந்து நாளிதழ் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
விழாவின் ஓர் அங்கமாக அகம் தியேட்டர் ‘லேப்‘ படைக்கும் ‘முச்சந்தி’ நாடகம் ஆகஸ்ட் 2ஆம் தேதி அரங்கேற்றப்படவுள்ளது.
ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் நடைபெறும் ‘ஸ்கிரீன் சிட்டி’ நிகழ்ச்சி, இந்தியத் திரைப்படங்களில் சிங்கப்பூர் எவ்வாறு சித்திரிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து சுவாரசியமாக விவரிக்கப்படும்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் ‘இண்டியா கனெக்ட்- சிங்கப்பூர் எடிஷன்’ கருத்தரங்கம் இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல், பொருளியல் தொழில்நுட்ப உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கும்.
ஆசிய ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த கிஷோர் மதுபானி, மத்திய அரசின் தலைமை பொருளியல் ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி சௌந்தர்யா சுகுமார் தயாரித்த மகாகவி பாரதியாரின் சிறப்பு ஆவணப் படமான ‘சக்திதாசன்’ திரையிடப்படுகிறது.
‘கேபெல்லா’ இந்திய, சிங்கப்பூர் பாணி இசைக் கச்சேரியும் அன்று நடைபெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட்1 முதல் 10 வரை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘காலம் காலமாகச் சிங்கப்பூர்’ (Singapore through the ages) என்ற தலைப்பில் இந்து குழுமத்தின் ஆவணக் காப்பகத்தின் தொகுப்பு அடங்கிய சிறப்புக் கண்காட்சி இடம்பெறுகிறது.
சிங்கப்பூர் அரசியல், பண்பாடு, கலை, சமையல், வங்கித்துறையில் தமிழக நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தின் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான ஆவணங்களைக் கண்காட்சியில் காணலாம்.
சிங்கப்பூர், இந்தியாவைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் ‘நகரத்தின் சிந்தனைகள்’ கண்காட்சி ஆகஸ்ட் 1 முதல் 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
குமரி நாகப்பன், கவிதா பத்ரா, பி.ஞானா, மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா உள்ளிட்ட பலரின் படைப்புகள் அக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
சிங்கப்பூரின் விருதுபெற்ற கலைஞரான அரவிந்த் குமாரசாமி, சிற்பி குமரி நாகப்பன் ஆகியோர் விழாவில் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
‘சிங்கப்பூரின் சுவை’ என்ற பெயரில் சிங்கப்பூர் சமையல் கலைஞர் சௌமியா வெங்கடேசனின் பிரம்மாண்ட உணவுத் திருவிழா, சென்னை ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் சோ யூ, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ ஆகிய பிரபல ஹோட்டல்களும் பங்கேற்கின்றன.
இந்து தமிழ் திசை’, ‘தி இந்து குழுமம்’ , ‘தி இந்து பிசினஸ்லைன்’ இணைந்து நடத்தும் இந்த விழாவிற்கு சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கி ஆகியவற்றுடன் தமிழ் முரசு நாளிதழ் உள்ளிட்ட பல நிறுவனங்கள், அமைப்புகளும் ஆதரவு வழங்குகின்றன.