திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சி சென்ற விமானத்தின்மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதால் அவ்விமானம் வானிலேயே அரைமணி நேரம் வட்டமடிக்க நேரிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) இரவு சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய ஸ்கூட் விமானம் ஒன்று திருச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதன்மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த விமானி, அதுகுறித்து விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, வானிலேயே வட்டமடித்தபடி இருந்தார்.
பின்னர், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையின் ஆலோசனையின்படி, 37 நிமிடம் தாமதமாக அவ்விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதேபோன்று மலேசியாவிலிருந்தும் துபாயிலிருந்தும் வந்த விமானங்கள் மீதும் லேசர் ஒளி அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதன் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.