சென்னை: தமிழகச் சட்டமன்றச் சபாநாயகராக தவெக உறுப்பினர் ஜேசிடி பிரபாகர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மேலும், துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்புக்குப் பிறகு சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா அறிவித்தார்.
இதையடுத்து ஆயிரம் விளக்குத் தொகுதியின் எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகர், பேரவைச் செயலாளர் கி.சீனிவாசனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
முதல்வர் விஜய், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அவர் மனுத்தாக்கல் செய்ததையடுத்து, துணைத்தலைவர் பதவிக்குத் துறையூர் தொகுதி எம்எல்ஏவான ரவிசங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இருவரையும் எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
சட்டமன்றத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், அவரை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.

