சென்னை: அதிமுகவில் அதிருப்தியாளர்களைச் சமாளிக்கும் வகையில் புதிய பதவிகள் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் சில மாவட்டங்களைப் பிரிக்கவும் அவற்றுக்குப் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் கட்சி மேலிடம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு பலரும் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது யார் யார் பதவியில் இருந்தார்களோ அவர்களே தொடர்ந்து பல பதவிகளிலும் நீடித்து வருகிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் மீது புகார் வந்தால் இப்போதைய கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்றும் இதனால் கட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பயம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. பதவியில் இல்லாதவர்கள் அத்தகைய பேர்வழிகளின் செயல்களைப் பார்த்து அதிருப்தி அடைந்து இருப்பதாக வட்டாரங்கள் கூறின.
அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது என்றாலும் நிர்வாகிகள் மாற்றம் பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை என்று கட்சியில் சலசலப்பு கிளம்பி இருக்கிறது. வழிகாட்டிக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார் என்றாலும் இதுவரை யில் எந்தவொரு குழுவும் இல்லை.
இந்த நிலையில், அதிருப்தியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டாக உள்ள மாவட்டங்களை மூன்றாகப் பிரிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த மாவட்டங்களுக்குப் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவற்றின் தொடர்பில் விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் அவை காரணமாக கட்சியில் இணக்கம் கூடும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.