கொரோனா கிருமித்தொற்று காரணமாக அனைத்துலக அளவில் விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இன்னும் 29 விமானங்கள் மூலம் சுமார் 26,000 தமிழர்கள் மீட்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வெளிநாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர். எத்தனை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன? வந்தே பாரத் அல்லது வேறு வகையில் கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம் உள்ளதா? நிதியுதவி, தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என திமுக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அப்போது, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 80 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்னும் 29 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 26,000 பேர் மீட்கப்படுவர் என மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மத்திய அரசின் பதில்மனு கிடைக்கப்பெறாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள், வரும் 29 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online