ஊதியமின்றித் தவிக்கும் 105 இந்தியர்களை குவைத்திலிருந்து மீட்க சீமான் கோரிக்கை

ஊதியமின்றித் தவிக்கும் 105 இந்தியர்களை குவைத்திலிருந்து மீட்க சீமான் கோரிக்கை

2 mins read
cacd9d7c-ec5c-41a2-b186-4ae75c2ab7d8
படம்: ராய்ட்டர்ஸ் -

குவைத் நாட்டில் நான்கு மாதங்களாக ஊதியமின்றி வாடும் தமிழகத்தைச் சேர்ந்த 99 பேர் உட்பட 105 இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "குவைத் நாட்டிலுள்ள அகமது அல்தாரிக் சன்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த 99 தமிழர்கள் உள்ளிட்ட 105 தொழிலாளர்கள் ஊதியம் கிடைக்கப்பெறாது உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் அல்லல்பட்டு வருகிற செய்தி பெரும் மனவேதனையைத் தருகிறது. கடந்த 2020, ஜூன் மாதத்திலிருந்து ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஊதியத்தை வழங்காமல் அந்நிறுவனம் மறுத்து வருவதும், ஒப்பந்தக்காலம் முடிந்தும் தாயகம் திரும்ப விரும்பும் தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகப் பணிபுரிய கட்டாயப்படுத்துவதுமென அந்நிறுவனத்தின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்நிறுவனத்தால் குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் குடியிருப்பிற்கு, தொடர்புடைய நிறுவனம் வாடகை தராததால், குடிநீர், மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், கட்டட உரிமையாளர்களால் எப்போது வேண்டுமானாலும் குடியிருப்பைவிட்டு வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்துடனேயே தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் பலர் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவும், 'விசா' காலம் முடிந்துவிட்டபடியால் மருத்துவமனைகளில் தக்க மருத்துவம் முறையாகச் செய்து கொள்ள இயலாமல் சிரமப்பட்டு வருவது அத்தொழிலாளர்களின் குடும்பத்தினரைப் பெருங்கலக்கத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது என்று தமது கடிதத்தில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மங்களசாமி என்பவர் அதிக இரத்த அழுத்தத்திற்கு ஆளாகி, தற்போது ஒரு கை, கால் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாயகத்தில் குடும்பத்தாருக்கு பணம் எதுவும் அனுப்ப முடியாத சூழலில் அவர்களது குடும்பத்தாரும் தவிப்பதாக திரு சீமான் குறிப்பிட்டார்.

குவைத்தில் உள்ள தன்னார்வலர்களும் செந்தமிழர் பாசறை இயக்கத்தினர்களும் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்து வருகின்றனர் என்ற திரு சீமான், இந்தத் தொழிலாளர்களின் நிலையை விளக்கி குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் தமிழக அரசும் மத்திய அரசும் இவ்விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையினைப் பெற்றுத் தந்து, தாயகம் திரும்ப உதவ வேண்டும் என திரு சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்