விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசார பயணத்தின் அங்கமாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது 27வது குருமகா சன்னிதானம் உதயநிதி ஸ்டாலினுக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து, தமிழ்க்கடவுள் சேயோன் (முருகன் பாமாலை) என்ற மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
1972ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது தருமபுரம் ஆதீனமடத்தில் கலைஞர் மு.கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு 27வது குருமகா சன்னிதானம் வழங்கினார்.
இதை தொடர்ந்து, 26வது குருமகா சன்னிதானம் முக்தியடைந்து ஓராண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து வெளியிடப்பட உள்ள குருபூஜை மலருக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை உதயநிதி ஸ்டாலின் குருமகா சன்னிதானத்திடம் வழங்கி ஆசி பெற்றார்.