சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்ற பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கடலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது 152 கிராம் எடையிலான ரூ.7.65 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதேபோல துபாயில் இருந்து திருச்சிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சோதனையிட்டதில் நாகை மாவட்டம் பழையாறையை சேர்ந்த முகமது சாதிக் என்பவரிடமிருந்து 1,128 கிராம் எடையிலான ரூ56.61 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதே விமானத்தில் பயணம் செய்த தஞ்சையைச் சேர்ந்த முகமது ஜியாவுதீன் சாகிப் என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்துச் சென்ற 896 கிராம் தங்கக் கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.44.97 லட்சம்.
தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது சாதிக் மற்றும் முகமது ஜியாவுதீன் சாகிப் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.