திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனியில் வசித்து வந்த அன்னை இந்திரா என்பவர் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் பால்ராஜ்; தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இந்திராவும் பால்ராஜும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்திராவிற்கு நீண்ட காலமாகவே உடல்நிலையில் பாதிப்பு இருந்து வந்ததாகவும் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வார் எனவும் கூறப்படுகிறது. தம் அக்கா மற்றும் குடும்ப நண்பர் சுதர்சனம் ஆகியோருடன் இந்திரா வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி மருத்துவ விடுப்பில் சென்ற அவர், கிறிஸ்மஸ் தினத்தன்று பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், அவர் பணிக்குத் திரும்பாததால், தகவல் அறியச் சென்ற போலிசார், வீடு பூட்டி இருப்பதையும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வருவதையும் கண்டனர்.
கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இந்திராவின் சடலம் துணியால் போர்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவரது சகோதரியிடம் விசாரித்ததில், கடந்த மாதம் 7ஆம் தேதி உடல் நலக் குறைவால் இந்திரா இறந்துவிட்டதாகவும் அவர் உயிர்த்தெழுந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தினமும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இந்திரா இறந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது சடலம் பெரிதும் சிதைந்து போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாசுகி, சுதர்சனம் ஆகியோரை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.