‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என போற்றப்படும் பிரபல எழுத்தாளரான கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99.
திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர் கி.ரா. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.
தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். மறைந்த கி.ரா அவர்களுக்கு திவாகர், பிரபாகர் என இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2019 செப்டம்பர் 25ஆம் தேதி கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கியவர் கி.ரா.
சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கி.ரா பெற்றுள்ளார்.
‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என போற்றப்பட்ட எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர், தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என்றழைக்கப்பட்டவர்.
அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட எழுத்தாளர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கி.ரா மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள் என்றார் திரு ஸ்டாலின். “கரிசல் இலக்கியமும் இந்த மண்ணும் தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்,” என்று அவர் கூறியுள்ளார்.
கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம் வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர் கி.ரா என்று திமுக மக்களவை எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி, தமிழக எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அரசு மரியாதையுடன் கி.ராவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ள திரு ஸ்டாலின், “குடும்பத்தினர், வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.