சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்ற அவரது உற்ற தோழியான சசிகலா கண்ணீர்விட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தம் ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களுக்கும் சென்று அவர் மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் கண்கலங்கிய நிலையில் பலமுறை மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய சசிகலா, “என் மனதில் இருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்துவிட்டேன். தொண்டர்களையும் கழகத்தையும் அம்மாவும் தலைவரும் (எம்ஜிஆர்) காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு நான் புறப்படுகிறேன்,” என்று தெரிவித்தார்.
அதிமுக கொடியேற்றப்பட்ட, ஜெயலலிதா பயன்படுத்திய வாகனத்தில் சசிகலா மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார்.
எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அதிமுக நாளை தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் வேளையில் சசிகலா சூறாவளியாகப் புறப்பட்டு உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். அதன் பின்னர், கட்சித் தொண்டர்கள் சிலரிடம் தொடர்புகொண்டு “அதிமுகவை மீட்டெடுப்பேன்” என்று கூறி வந்தார்.
இதற்கிடையே, சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
“சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் ‘பில்டப்’ செயற்கையானதாக இருக்கிறது. இயற்கையாக இல்லை. இது, கட்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதிமுகவை கைப்பற்ற நினைப்பது பகல் கனவு,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மற்றொரு நிலவரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் 2017 பிப்ரவரி 14ஆம் தேதி சசிகலா, இளவரசி ஆகியோருடன் சிறைக்குச் சென்ற சுதாகரன் நேற்று விடுவிக்கப்பட்டார். அபராதத் தொகையை கட்டாததால், சுதாகரன் கூடுதலாக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது.
சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணியின் மகன் சுதாகரன். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என்றும் சொல்லப்பட்டது.
ஜெயலலிதா நேரில் நடத்திவைத்த ஆடம்பரமான திருமணத்தில் நடிகர் சிவாஜியின் மகள் வழிப் பேத்தியான சத்தியலட்சுமியை சுதாகரன் மணந்தார். இந்தத் திருமணத்தில் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த காட்சிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதங்களை எழுப்பியது.