தீபாவளிப் பண்டிகை நெருங்கும் வேளையில், குற்றச்செயல்களில் ஈடுபடக் காத்திருக்கும் ஏறத்தாழ 7,800 குற்றவாளிகள் சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் நடவடிக்கைகளைக் காவல்துறையினர் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
“குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு எங்கள் பிடியிலிருந்து அவர்கள் எங்கும் தப்பித்து ஓடவோ ஒளியவோ முடியாது,” என்றும் அவர் கூறினார்.
தீபாவளித் திருநாள் நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தங்களுக்குத் தேவையான புத்தாடைகள், மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர்.
பண்டிகைக்கால கூட்ட நெரிசலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சங்கிலி மற்றும் பணப்பையைப் பறித்துச் செல்வது, கைபேசியைத் திருடுவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காகக் காத்திருக்கும் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் கைவரிசையைக் காட்டுவதற்கு முன்பே, அவர்களை மடக்கிப் பிடிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குப் போலிசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய 6,000 போலிசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தீபாவளி நெருங்கும் வேளையில், முக்கிய கடைவீதிகளில் குற்றச்செயல்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
“பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. ‘பைனாகுலா்’, ஆளில்லா வானூர்திகள் மூலமாகவும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
“முக அடையாளச் சோதனை முறையைக் கொண்டு சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவா்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறோம்.
“ஆங்காங்கே ஏராளமான போலிசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் குற்றவாளிகள் உடனுக்குடன் பிடிபடுவார்கள்,” என்று கூறினார்.